வானில் அரிய நிகழ்வான ப்ளூ மூன் எனப்படும் நீல நிலவு இன்று தோன்ற உள்ளது. அரிதாக இந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டு முழு நிலவு வருகிறது. இந்த இரண்டில் இரண்டாவதாக வரும் நிலவுக்கு நீல நிலவு என்று பெயர். தவிர, நிலவு நீல நிறத்தில் தோன்றாது.
அக்டோபர் 1 ஆம் தேதி ஒரு முழு நிலவு வந்தது, அதன் பின் அக்டோபர் 31 அன்று வருகிறது. இதற்கு காரணம், நிலவினுடைய சுழற்சி முறை.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று நீல நிலவு நிகழ்வு நடைபெற்றது. அதற்கு முன்னர் அதே 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று நிகழ்ந்தது. அதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 31 நடைபெற்றது. அடுத்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தோன்றும்.
நிலவினுடைய சுழற்சி காலம் 29.5 நாட்கள். ஒவ்வொரு 29.5 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் – பூமி – நிலா ஒரே நேர் கோட்டில் வந்து கொண்டே இருக்கும். அதன்படி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை முழு நிலவு தோன்றும். வருடத்திற்கு 12 முறை முழு நிலவைப் பார்க்கலாம். நிலவின் சுழற்சி கால அடிப்படையில் பார்த்தால், ஒரு வருடத்தின் 12 சுழற்சிக்குப் பின்னர் 11 நாட்கள் மீதமிருக்கும்.
இந்த மீதமிருக்கும் நாட்கள் சேர்ந்து ஒவ்வொரு 2.7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நீல நிலவு நிகழ்வு நடைபெறும். அதுவும் 31 நாட்கள் உள்ள மாதங்களில் நடைபெறும். அதாவது 19 ஆண்டுகளுக்குள் 7 முறை இந்த நிகழ்வு நடைபெறும்