மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) புத்துயிர் பெறுவதற்கான மற்றொரு முயற்சியாக, கடந்த ஜூலை 27 அன்று மத்திய அமைச்சரவை ரூ1.64 லட்சம் கோடி மறுமலர்ச்சி பேக்கேஜுக்கு ஒப்புதல் அளித்தது.
மேலும் இதன் ஒரு பகுதியாக பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நிறுவப்பட்ட பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) பிஎஸ்என்எல்-உடன் இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் நல்ல பலன்கள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. BSNL நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சனை என்ன, புத்துயிர் கொடுக்க அரசு இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மறுமலர்ச்சிக்காக ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்) இணைப்புக்கு அமைச்சரவை பச்சைக் சமிக்ஞை கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த இணைப்பின் மூலம், பிபிஎன்எல்லின் 5.67 லட்சம் கிமீ ஆப்டிகல் ஃபைபரின் முழுமையான கட்டுப்பாட்டை பிஎஸ்என்எல் கொண்டிருக்கும். நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் 4ஜி மொபைல் சேவையை கொண்டு செல்லும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வேலை (Universal Service Obligation Fund). இதற்கு சுமார் ரூ.26,316 கோடி செலவாகும். அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்தார்.
தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது BSNL நிறுவனம். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.50,631 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார். 2019-20ல் BSNL-ன் இழப்பு ரூ.15,500 கோடியாக இருந்த நிலையில், இடையில் அறிவிக்கப்பட்ட ஒரு மறுமலர்ச்சி பேக்கேஜ் காரணமாக 2020-21ல் நிறுவனத்தின் இழப்பு ரூ.7,441 கோடியாகக் குறைந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் தற்போது ரூ.33,000 கோடி கடனிலிருந்தாலும், வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற தனியார்த் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த கடனை கொண்டுள்ளது